ஆப்நகரம்

கொழுந்துவிட்டு எரியும் தீ: கோவை அசோகபுரம் குப்பைக் கிடங்கால் தெருவுக்கு வந்த மக்கள்!

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 6 Aug 2021, 7:58 am
கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் மலை போல் பல ஆண்டுகளாகக் குவிக்கப்பட்டு வந்துள்ளது.
Samayam Tamil கொழுந்துவிட்டு எரியும் தீ: கோவை அசோகபுரம் குப்பைக் கிடங்கால் தெருவுக்கு வந்த மக்கள்!


இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் அந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். அந்த தீ குப்பைமேடு முழுவதும் பரவிக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து 6 மணி நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். ஆனால் அதன்பின்பும் தீ முழுமையாக அணையாமல் கடந்த 3 நாட்களுக்கு மேலாக ஆங்காங்கே எரிந்துகொண்டும், புகை மூட்டமாகவும் உள்ளது.

இதனால் அப்பகுதில் குடியிருப்போர் சுவாசிக்கவே மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இனிமேல் குப்பைகளைக் கொட்டக்கூடாது எனவும், தீயை முழுமையாக அனைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உரிமைக் குரல் எழுப்பினர்.
ரூ 35 ஆயிரத்துடன் விபத்தில் சிக்கி மயங்கியவரை மீட்ட 108 ஆம்புலன்ஸ் கோவை ஊழியர்கள்!
போராட்டத்தையடுத்து குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி தலைவர் ரமேஷ் மற்றும் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் உறுதியளித்தனர். எனினும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் ஊராட்சி அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பொதுமக்களிடம் குப்பை தொடர்பாக மனுவைப் பெற்ற ஆய்வாளர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி