ஆப்நகரம்

15 அடி ராஜ நாகத்தை கைகளில் பிடித்து, மடித்துச் சென்ற வனத்துறை!

விவசாய நிலத்திற்குள் புகுந்த ராஜ நாகத்தைப் பிடித்து காடுகளில் விட்டு வந்த வனத்துறையினர்...

Samayam Tamil 11 Jul 2020, 5:28 pm
விவசாய நிலத்தையே தேடி வரும் 15 அடி ராஜநாகத்தை மீட்ட வனத்துறையினர், இந்த முறை இடத்தை மாற்றி அந்த பாம்பை சிறுவாணி அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் அருகே வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த விவசாய நிலத்தில் ராஜநாகம் புகுந்ததாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனச்சரகர் ஆரோக்கியசாமி உத்தரவில் அங்குச் சென்ற வனத்துறையினர் ஆசிப் உள்படப் பாம்பு பிடிக்கும் நபர்களும் குறித்த பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு விவசாய நிலத்திலிருந்த பம்ப் செட்டு ஒன்றில் ராஜநாகம் இருப்பதாக அங்குள்ளவர்கள் கூறினர். குறிப்பிட்ட பகுதியைச் சோதித்தபோது, 15 நீலத்தில் ராஜநாகம் ஒன்று இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

“ஆன்லைன் வகுப்புக்குக் கட்டணம்” போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்!

கண்டறிந்த பாம்பைப் பக்குவமாகக் கையில் பிடித்து மூட்டையில் போட்டு மடித்த வனத்துறையினர், அதன் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அந்த ராஜநாகம் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பாம்பை அங்கிருந்து சிறுவாணி அடர்ந்த காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்ற வனத்துறையினர், அங்கு அதை விட்டு வந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் நிருபர்களிடம் கூறுகையில், “பிடிபட்ட ராஜநாகம் ஏற்கனவே இரண்டு முறை விவசாய நிலத்திலிருந்து பிடிக்கப்பட்டு வைதேகி நீர் வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. எனினும் அந்த பாம்பு தொடர்ந்து விவசாய நிலத்திற்குள் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், ராஜநாகத்திற்கும் ஆபத்து ஏற்படலாம் எனவே இடத்தை மாற்றும் வகையில் இந்த முறை ராஜநாகம் சிறுவாணி அடர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

அடுத்த செய்தி