ஆப்நகரம்

ஊரடங்கின்போது புகையிலை, குட்கா விற்றவர்கள் கைது!

ஊரடங்கு உத்தரவையும் மீறி கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 20 Apr 2020, 8:07 pm
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 3ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், அத்தியாவசிய தேவைகளை தாண்டி பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை. இதனையும் மீறி வெளியே வருபவர்கள் மீது மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
Samayam Tamil ஊரடங்கின்போது புகையிலை குட்கா விற்றவர்கள் கைது


இந்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், அப்பொருட்களை அவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் பிறப்பித்த உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகனின் அறிவுறுத்தலின் அடிப்படையில், ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் அரவிந்தராஜ், காவலர்கள் மகேந்திரன், பிரகாஷ்ராஜ், யுவராஜ் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சோமனூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் உள்ள பவானி ஏஜன்சீஸ் மற்றும் கருமத்தம்பட்டி மெயின் ரோட்டில் இயங்கி வரும் ராம்தேவ் ஏஜன்சீஸ் ஆகிய கடைகளில், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்துவந்த ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்பாராவ் மற்றும் சிகல்லால் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.50,000 மதிப்பிலான புகையிலை, குட்கா ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அடுத்த செய்தி