ஆப்நகரம்

மிரட்டும் கொரோனா... கோவையில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமல்!

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கோவை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 26 Jun 2022, 12:09 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. தினசரி தொற்று படிப்படியாக அதிகரித்து கடந்த 23ஆம் தேதி ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்றைய தினம் 1,382 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கையில் சென்னை, செங்கல்பட்டு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கோவை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி இங்கு புதிதாக 89 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil coimbatore district collector gs sameeran ias orders to implement coronavirus restrictions
மிரட்டும் கொரோனா... கோவையில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமல்!



அதிகரிக்கும் கொரோனா

மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 347ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்சியர் ஆலோசனை

கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொலி கூட்டம் நடைபெற்றது. அதில், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. சுகாதாரத்துறையில் தினசரி செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்களை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பயத்துக்கே பயம் காட்டிட்டாரு... வச்சு செஞ்ச கோவை மேயர்... மாட்டிக் கிட்ட கவுன்சிலர்கள்!

பரிசோதனைகள் கட்டாயம்

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களின் நிர்வாகத்தினர் அந்த இடங்களில் உள்ளே நுழைபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தல், கிருமி நாசினி வைத்தல், கிருமி நாசினி தெளித்தல் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரஸ் உருமாற்றம்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். தவறினால் பொது சுகாதார சட்டத்தின் கீழ் 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய பட்டியலை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்தால், அவர்கள் மாதிரியை மரபணு பகுப்பாய்வு செய்து, வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய வேண்டும்.

தடுப்பூசி அவசியம்

பொதுமக்கள் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுய மருத்துவம் செய்திடக் கூடாது. மேலும் 12-14 வயது வரை உள்ளவர்கள் Corbevax தடுப்பூசி, 15-18 வயது உடையவர்கள் Covaxin தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.


அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

இதுவரை தடுப்பூசி போடாத நபர்கள் தவணை தடுப்பூசி, 60 வயதை கடந்தவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி முடிந்து 90 நாட்கள் ஆகியிருந்தால் பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்டவற்றை போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி