ஆப்நகரம்

புதிய பதவி, வேற லெவல் என்ட்ரி... திமுகவில் மீண்டும் சீனுக்கு வந்த மீனா ஜெயக்குமார்

திமுக தலைமை கழக நிர்வாகிகள் தொடர்பான வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மீனா ஜெயக்குமாருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 29 Nov 2022, 1:33 pm
தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இதையொட்டி வழக்கமாக நடத்த வேண்டிய மாவட்ட செயலாளர்கள் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதன் தொடர்ச்சியாக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்டவற்றிற்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் உதயநிதி மீண்டும் இளைஞரணி செயலாளர் ஆன நிலையில், கனிமொழிக்கு பதிலாக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டார்.
Samayam Tamil coimbatore meena jayakumar enters in dmk again with party headquarters functionary post
புதிய பதவி, வேற லெவல் என்ட்ரி... திமுகவில் மீண்டும் சீனுக்கு வந்த மீனா ஜெயக்குமார்


மீண்டும் பதவி

இதையடுத்து திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை பொதுச் செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் வெளியிட்டார். அதில், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் துணைச் செயலாளர் பதவி 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மீனா ஜெயக்குமார். இந்த விஷயம் கோவை வட்டாரத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

இதற்கு பின்னால் உள்ளடி அரசியல் இருக்கிறது. அப்படியிருக்கையில் அவர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டது மட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளில் முக்கியமான பதவியும் அளிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இனி வரலாற்றை திரும்பி பார்ப்போம். கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் மேயர் பதவிக்கு அடிபட்ட பெயர்களில் ஒன்று மீனா ஜெயக்குமார்.


கோவையில் குவிந்த பெண் மேயர்கள்... இனிமே ஆக்‌ஷன் வேற லெவலில் தான்!

மேயர் சீட் கிடைக்கவில்லை

அந்த அளவிற்கு கோவை திமுகவில் பரபரப்பாக இயங்கி வந்திருக்கிறார். ஆனால் கடைசியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு கூட சீட் வழங்கப்படவில்லை. கோவையை சேர்ந்த இவர், திமுக மகளிர் அணியின் தொண்டர் அணி துணைச் செயலாளராக இருந்து வந்தார். சிங்காநல்லூர் பகுதியில் போட்டியிட கவுன்சிலர் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் வேட்பாளர் பட்டியலில் பெயர் வரவில்லை.

திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்

திமுக கூட்டத்தில் சலசலப்பு

இதன் காரணமாக அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் நடந்த கோவை மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அப்போதைய மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் சிங்காநல்லூர் கார்த்திக் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.


மேயரிடம் வாலாட்டிய திமுக புள்ளி... தலைமை எடுத்த நடவடிக்கை- கோவை களேபரம்!

கோவை மேயர் கல்பனா

இந்த சூழலில் கார்த்திக் மனைவி இளஞ்செல்விக்கு மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. மீனா ஜெயக்குமார் பேச்சால் எல்லாம் தலைகீழாக மாறியது. எளிய குடும்பத்தை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமாருக்கு மேயர் பதவி கொடுத்தது திமுக தலைமை. இதனால் மீனா ஜெயக்குமாரை கட்சியில் இருந்து நீக்க அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் கார்த்திக் காய் நகர்த்தியதாக சொல்லப்பட்டது.

பரபரப்பில் கோவை

கடைசியில் திமுக தலைமை அதிரடியாக இடைநீக்கம் செய்து மீனா ஜெயக்குமாரை வெளியேற்றியது. சுமார் 8 மாதங்களாக கட்சிக்குள் எட்டி பார்க்காத நிலையில், தலைமை கழக பதவியுடன் திமுகவில் மீண்டும் எட்டி பார்த்திருக்கிறார். தற்போது கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நா.கார்த்திக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட திமுகவில் இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர்.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி