ஆப்நகரம்

குழந்தைக்கு புத்தகம் வாங்க சென்ற தாய்க்கு நேர்ந்த கொடுமை!

குழந்தைக்கு புத்தகம் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்ற பெற்றோர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் தாய் பலியானார்.

Samayam Tamil 21 May 2020, 10:34 pm
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைக்கு புத்தகம் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து விழுந்ததில் தாய் பலியான சம்பவம் அப்பகுதி மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Coimbatore accident


கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜா மற்றும் காயத்ரி(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் குழந்தைகளுக்கான புத்தகத்தை வாங்க வருமாறு பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

இந்த சூழலில் ராஜா மற்றும் காயத்ரி இருவரும் குழந்தைக்கு புத்தகம் வாங்க தங்களது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் லட்சுமி மில் ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு சாலையோரம் இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து இந்த தம்பதியினர் மீது விழுந்தது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார். கணவர் ராஜா தலைக்கவசம் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் காயத்ரியை மீட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் காயத்ரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி