ஆப்நகரம்

காவல்நிலைய திறப்பு விழாவில் தன்னை கைது செய்யுமாறு கூச்சலிட்ட விவசாயி!

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற காவல்நிலைய திறப்பு விழாவில், விவசாயி ஒருவர் சந்தனமரத்தை வெட்டி எடுத்து வந்து தன்னை கைது செய்யுமாறு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 19 Mar 2018, 1:22 pm
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற காவல்நிலைய திறப்பு விழாவில், விவசாயி ஒருவர் சந்தனமரத்தை வெட்டி எடுத்து வந்து தன்னை கைது செய்யுமாறு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil farmer


கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியில் புதிய காவல்நிலைய திறப்புவிழா நடைபெற்றது. அப்போது கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோட்டத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி எடுத்து வந்து, தன்னை கைது செய்யுமாறு கூச்சலிட்டார்.

இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை தங்கள் வாகனத்தில் அமரவைத்தனர். இதனையடுத்து செய்தியாளகளிடையே பேசிய விவசாயி, தனது பெயர் சந்தன மோகன் என்றும், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் தனது நிலத்தில் விளைந்த 400 கிலோ சந்தன மரத்தை வெட்டி, கோவை மாவட்ட வனஅலுவலரிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார். அதற்காக இதுவரை தனக்குப் பணம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய விவசாயி சந்தன மோகன், அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதைத் தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறினார்.

இதனால் தன்னை கைது செய்து, புதிய காவல் நிலையத்தில் முதல் வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். தனக்கு தீர்வு கிடைக்கும் என்பதற்காகவே, மீண்டும் தன் வீட்டில் வளர்த்த சந்தனமரத்தை வெட்டி எடுத்து வந்து சரணடையை வந்திருப்பதாக விவசாயி சந்தன மோகன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி