ஆப்நகரம்

மேஜராகவே இல்லை அதற்குள் 2 திருமணம்; கணவர்கள் மீது போக்ஸோ!

கோவையை சேர்ந்த ஒரு சிறுமி தனது 17 வயதிற்குள் 2 முறை திருமணம் செய்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிச்சத்திற்கு இப்போது வந்துள்ள விவகாரம் தொடர்பாக 2 பேர் மீது போக்ஸோ பாய்ந்தது...

Samayam Tamil 30 Oct 2020, 2:59 pm
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி சமீபத்தில் ஒரு லாரி டிரைவரை திருமணம் செய்துள்ள நிலையில், முன்னதாக 15 வயதில் பெற்றோர் ஒருவரைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil மேஜராகவே இல்லை அதற்குள் 2 திருமணம்; கணவர்கள் மீது போக்ஸோ!
மேஜராகவே இல்லை அதற்குள் 2 திருமணம்; கணவர்கள் மீது போக்ஸோ!


கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது பெற்றோர் திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றிவந்த உறவினர் ஒருவருக்குக் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் முடித்து வைத்துள்ளனர். இதையடுத்து சிறுமி அந்த உறவினரைக் கணவராக நினைத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் சிறுமியின் உறவினர் ஒருவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு உதவியாகச் சிறுமி மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது குறிப்பிட்ட மருத்துவமனையில், முத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சிவா(25) விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வந்து சென்ற சிறுமிக்கும் சிவாவுக்கும் மருத்துவமனையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் தொலைப்பேசியில் உறவு நீட்டித்துள்ளது. சிவா குணமடைந்த பின் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். சிறுமியும் சிவாவும் அதிக நேரம் செலவிடுவது சிறுமியின் கணவர் கவனத்திற்குச் சென்றுள்ளது. சிவாவிடம் பேசுவதைத் தவிர்க்கும்படி கணவர் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாகச் சிறுமிக்கும் அவரை திருமணம் செய்து கொண்டவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபித்துக் கொண்ட சிறுமி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். அதன்பின் வீட்டைவிட்டு வெளியே சென்ற அந்த சிறுமி மருத்துவமனையில் பழகிய சிவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மாணவிக்கு ஆபாசச் செய்தி அனுப்பிய ஆசிரியர்: 9 வருடம் கழித்து போக்ஸோ!

இதுகுறித்து அறியாத சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளைக் காணவில்லை என சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் சிறுமி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த மச்சூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேரடியாகக் கொடைக்கானல் சென்ற தனிப்படை போலீசார், ஒரு வீட்டிலிருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். சிறுமியுடன் தங்கியிருந்த லாரி ஓட்டுநர் சிவாவைக் கைது செய்த போலீசார், அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில் சிவா சிறுமியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதற்கிடையே போலீசார் சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது குழந்தைகள் திருமணம் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேவேளைச் சிறுமியைத் திருமணம் செய்து கொண்ட 2 பேர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி