ஆப்நகரம்

கோவையில் பரபரப்பு; ஐ.எஸ் பயங்கரவாதிகள் உடன் தொடர்பு; மேலும் மூவரைக் கைது செய்த என்.ஐ.ஏ!

கோவையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக அடுத்தடுத்து கைதுகள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Samayam Tamil 14 Jun 2019, 3:07 pm
வளைகுடா நாடுகளில் பலம் வாய்ந்த பயங்கரவாத இயக்கத்தினராக ஐ.எஸ்.ஐ.எஸ் திகழ்கின்றனர். இதில் சேருவதற்கு இந்தியாவில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதிலும் கேரள மாநிலத்தில் இருந்து, பலரும் ஐ.எஸ் அமைப்பில் இணைந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil NIA Arrest in Kovai


இந்த இயக்கத்திற்கு ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக, கேரளாவை சேர்ந்த அபுபக்கர் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீனுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

சமீபத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், இலங்கை விரைந்தனர்.

அங்கு தீவிரமாக நடைபெற்ற விசாரணையில், தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் உடன், முகமது அசாருதீனுக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு, அசாருதீன் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

கோவையில் இருந்த அசாருதீன் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் 8 மணி நேர சோதனை நடத்தப்பட்டது. அதில், செல்போன்கள், பென் டிரைவ், வீடியோக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அசாருதீன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 2 நாட்களாக அசாருதீன் கூட்டாளிகளின் இடங்களில் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசாருதீன் உடன் தொடர்புடைய 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி