ஆப்நகரம்

கோவை மக்களே உஷார் - வனத்துறை முக்கிய எச்சரிக்கை!

கோவையில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்கள் தொடர்பாக வனத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 12:21 pm
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்கள் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பல யானைகள் போதிய உணவின்றி தவித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் வனப்பகுதிகளில் இருந்து உணவு தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் யானைகள் நுழைந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படுகிறது. இதுபற்றி தகவலறிந்து வரும் வனத்துறை அதிகாரிகள், யானைகளை மீண்டும் வனப்பகுதிகளுக்குள் விரட்டி அடிக்கின்றனர். இதுதொடர்பாக கோவை வனத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Kovai Elephant


அதாவது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகமான கண்டியூர், தேக்கம்பட்டி பகுதிகளிலும், சிறுமுகை வனச்சரகமான மொக்க மேடு, உளியூர், காந்தவயல் பகுதிகளிலும் கோவை வனச்சரகமான வீரபாண்டி, கிளாசிக் வில்லேஜ், திபனூர் மற்றும் அங்குள்ள தடாகம் செங்கல் சூளைப் பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது.

எனவே அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்க்க வேண்டும். தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தி விட்டு வெளியே நடமாடக் கூடாது.

கோவையில் காவலர் உயிரிழப்பு, 21 குண்டுகளுடன் அரசு மரியாதை!

எப்போதும் அருகிலுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மேலும் தங்கள் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பின் உடனே அருகிலுள்ள வனத்துறை ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

யானைகளை கல்லால் அடித்தோ, வேறு ஏதாவது முயற்சிகள் செய்து விரட்ட முயற்சிக்க வேண்டாம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி