ஆப்நகரம்

ஆன்லைன் ரம்மி விபரீதம்... ஒரே நாளில் இரண்டாவது தற்கொலை

ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இந்தப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் மூன்றாவதாக மற்றொரு நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Nov 2020, 4:51 pm
கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஒரே நாளில் ஆன்லைன் ரம்மியால் நிகழும் இரண்டாவது தற்கொலை இது.
Samayam Tamil ஆன்லைன் ரம்மியால் தற்கொலை


ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சென்னை, பாண்டிச்சேரி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த நபர்கள் தற்கொலை செய்துகொண்டு வரும் நிலையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மேலும் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் பார்பர் காலனி பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரது மகன் ஜீவானந்தம். 28 வயதான இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும் வர்ஷன் என்ற ஐந்து வயது மகனும் உள்ளனர். பல வருடங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய ஜீவானந்தத்தை அவரது மனைவி பலமுறை கண்டித்தும் தொடர்ந்து விளையாடியுள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தாயாரின் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜீவானந்தம் தனது தொழில் பங்குதாரர்கள் கொடுக்க வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார்.

இதில் 20 ஆயிரம் பணத்தை மொத்தமாக இழந்த அவர் ஆத்திரத்தில் தனது மொபைலை உடைத்துவிட்டு வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவையில் சீரநாயக்கன்பாளையம் மற்றும் போத்தனூர் பகுதியில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் மூன்றாவதாக மற்றொரு நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி