ஆப்நகரம்

மற்றொரு பஞ்சாயத்து தலைவரிடம் தீண்டாமை; மீண்டும் வெடிக்கும் சாதிக் கொடுமை!

திருவள்ளூர் மாவட்டத்தைத் தொடர்ந்து கோவையிலும் ஊராட்சி தலைவருக்கு தீண்டாமைக் கொடுமை நிகழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Aug 2020, 2:04 pm
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் மேம்பட்டு விட்டோம் என்று கூறினாலும் சாதியக் கொடுமைகள் இன்னும் நீங்கியபாடில்லை. சமூகத்தின் அடித்தட்டு மக்களை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டைக் கேலியாக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் கிராமப்புறங்கள் பலவும் இன்னும் தீண்டாமையை கைவிட்டதாக தெரியவில்லை. அதற்கு உதாரணமாகத் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் அம்மாள், கடந்த சுதந்திர தினத்தன்று கொடியேற்ற அனுமதிக்கப்பட வில்லை.
Samayam Tamil Kovai Village President


இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தில் இருந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவழியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து அமிர்தம் அம்மாள் தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிலையில் கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

எனக்கு இன்றுதான் சுதந்திர தினம் - தலித் தலைவர் ஆத்துப்பாக்கம் அமிர்தம்

அதில், தான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்காரக்கூட விடுவதில்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் என்னை மிரட்டுகிறார். ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள தகவல் பலகை, ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் “ஊராட்சி தலைவர் சரிதா” என்ற பெயரை எழுதவிடாமல் தடுக்கின்றனர்.

தலைவர் நாற்காலியில் அமர்ந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக சரிதா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி