ஆப்நகரம்

செல்போன் டவரால் சீரழியும் கோவை மக்கள்: எப்போதுதான் அரசு காதுகொடுக்கும்?

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளிமடை பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 11 Feb 2021, 6:43 pm
கோவை மாவட்டம் திருச்சி சாலை சிங்காநல்லூர் படகு இல்லம் அருகே உள்ள கள்ளிமடை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil செல்போன் டவரால் சீரழியும் கோவை மக்கள்: எப்போதுதான் அரசு காதுகொடுக்கும்?


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கள்ளிமடை 63 வார்டு பகுதி காமராஜர் நகரில் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் 127 கதவு எண் கொண்ட ஒருவரது வீட்டின் முதல் மாடியில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு செல்போன் டவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தற்போது மீண்டும் இப்பணிகள் தொடர்வதாகக் குற்றம் சாட்டினர்.

இப்பகுதியில் முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என 10, 000 பேர் வசித்து வருவதாகவும் இந்த செல்போன் டவர் அமைக்கப்படும் பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் இதனை இங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

கோவையில் பரோட்டாவுக்கு குருமா கேட்ட பட்டியலினத்தவர் அடித்துக் கொலை..! பதட்டத்தில் நகரம்

மேலும் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய இடங்களில் செல்போன் டவர் அமைக்க அரசு மற்றும் உயர்நீதிமன்ற ஆணைகள் இருப்பதாகவும் இதனை மீறி தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைத்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த பணிகளை நிறுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாநகராட்சி ஆணையர் உட்படப் புகார் மனு அளிக்கப்பட்டும் எந்த பயனுமில்லை என வேதனை தெரிவிக்கும் மக்கள், பணிகள் தொடர்ந்து நடப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி