ஆப்நகரம்

நாட்டை உலுக்கிய கர்ப்பிணி பலாத்காரம்... 11 குற்றவாளிகளுக்கு மன்னிப்பு... ஸ்வீட் எடுத்து கொண்டாட்டம்

2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது.

Samayam Tamil 16 Aug 2022, 1:55 pm
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 2002 பிப்ரவரியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டி எரிக்கப்பட்டது. இதையொட்டி வெடித்த பயங்கர கலவரத்தில் 790 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள் உட்பட 1,044 பேர் கொல்லப்பட்டனர். 2,500 பேர் காயமடைந்தனர். 223 பேர் எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை. அவர்களை சடலமாகவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
Samayam Tamil file pic


இந்நிலையில், பில்கிஸ் பானோ (19) என்ற கர்ப்பிணி பெண் மார்ச் 3 அன்று தனது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 15 பேருடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு வயலில் தஞ்சம் அடைந்தார். அப்போது 20-30 பேர் கொண்ட கும்பல் அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். மேலும், பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானோவின் மூன்று வயது மகள் சலேஹாவை பாறையில் முட்டி கொடூரமாக கொன்றனர். மற்ற 6 பேர் உயிரை காப்பாற்றிக்கொண்டு தப்பினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 பேர் 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஜனவரி 21, 2008 அன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானோவை கூட்டு பலாத்காரம் செய்தது, குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

மேலும், பில்கிஸ் பானோவுக்கு 50 லட்சம் இழப்பீடு, வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433-ன் கீழ் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரியும் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதில், ஏப்ரல் 1, 2022 நிலவரப்படி 15 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் நிவாரணம் இல்லாமல் சிறையில் அவதிப்படுவதாக ராதேஷ்யாம் ஷா குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் குஜராத் அரசு சிறப்பு குழுவை அமைத்தது. அந்த குழு, மேற்கண்ட 11 பேரை விடுதலை செய்யலாம் என அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கிய குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.


'துணைக்கு யாருமே இல்ல'... 27 வயதான பெண் தற்கொலை... மகள்கள் அனாதையான சோகம்

இதனால் பெண்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குற்றவாளிகள் விடுதலை குறித்து பேசிய பில்கிஸ் பானோ தரப்பு வழக்கறிஞர், இது கொலை வழக்கு மட்டுமல்ல, கொடூரமான கூட்டு பலாத்கார வழக்கும் ஆகும். அரசு இப்படி ஒரு முடிவை எடுக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். குஜராத் அரசின் விருப்பத்தை உச்சநீதிமன்றம் கேட்டபோது, குற்றவாளிகளுக்கு எதிராக பரிசீலித்திருக்க வேண்டும்'' என இவ்வாறு அவர் வேதனை தெரிவித்தார்.

அடுத்த செய்தி