ஆப்நகரம்

சென்னையில் 2 இளைஞர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை

சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் இளைஞர்கள் இருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 15 Jul 2019, 4:44 pm
சென்னையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று இளைஞர்கள் இருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Chennai Murder 1


தலைநகர் சென்னையில் அண்மை காலமாக நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. ரவுடிகள் இணைந்து பிறந்த நாள் கொண்டாடுவது, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தினந்தோறும் நடந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சென்னையில் இன்று இருவர் ஓட ஓட கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை மேற்கு தாம்பரத்தை அடுத்த அற்புதம் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப், சுரேஷ். இன்று காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தை மறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. உடனடியாக இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஓட முயற்சித்தனா்.

இருப்பினும் இருவரையும் ஓட ஓட சரமாரியாக தாக்கிய கும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கியது. இதில் பிரதீப், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இருவரும் சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட இருவரிடமும் கத்தி இருந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி