ஆப்நகரம்

தேனியில் 4 வயது சிறுவன் அடித்து கொலை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே 4 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 16 Jul 2019, 12:57 pm
தேனி மாவட்டத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Crime 1.


தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றனர். இருவரும் மறுமணம் செய்துகொண்டு, வேறொரு துணையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களது 4 வயது மகனை கீதாவின் சகோதரி வளர்த்து வந்தார். சிறுவன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமானான். மாயமான சிறுவனை இரவு முழுவதும் தேடிய நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சிறுவனை தேடி வந்தனர். அப்போது கோம்பை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் முகத்தில் பலத்த காயங்களுடன் சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் அங்கு சென்று உடலை மீட்ட காவல் துறையினர், அது மாயமான சிறுவன்தான் என்பதை உறுதி செய்தனர். 4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி