ஆப்நகரம்

தாய்க்கு அருகில் படுத்திருந்த குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் பெற்றோா் அருகில் படுத்திருந்த இரண்டரை வயது குழந்தை உயிாிழந்த நிலையில், கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Samayam Tamil 25 Jun 2019, 5:41 pm
கோவை விளாங்குறிச்சி பகுதியில் அம்மாவின் அருகில் படுத்திருந்த இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Coimbatore Baby


கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி காஞ்சனா. இவர்கள் கோவை விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ருதா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். இரவு உணவு சாப்பிட்ட பின்பு குழந்தையுடன் காஞ்சனா மற்றும் கனகராஜ் இருவரும் வீட்டின் உள்ளே உறங்கச் சென்றனர்.

உறவினர்களில் சிலர் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலை இரண்டரை மணியளவில் எழுந்த காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார். மீண்டும் நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் முன்பு எதாவது விளையாடிக்கொண்டு இருக்கும் என தேடிப்பார்த்தனர். அருகில் எங்காவது இருக்குமா என்று உறவினர்கள் மற்றும் கனகராஜூம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டுப் பகுதியில் தேடிப்பார்த்தபோது அங்குள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி குழந்தையை தூக்கினர். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோரின் அருகில் படுத்திருந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி