ஆப்நகரம்

தமன்னா- வை அடுத்து சிக்கிய இளைஞர்.. கோவையில் இன்ஸ்டாவால் குவியும் வழக்குகள்

கோவையில் இன்ஸ்ட்டாகிராமில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவேற்றம் செய்த இளைஞர் மீது வழக்கு பதிவு.

Samayam Tamil 17 Mar 2023, 6:20 pm
கோவையில் நடைபெற்ற இரு வேறு கொலை சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்யும் நபர்கள் உள்ளிட்டவர்களை காவல் துறையினர் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil coimbatore


அந்த வகையில் தமன்னா என்ற பெண் ஆயுதங்களுடன் ரீலிஸ் போட்டு வந்த வீடியோ அண்மையில் வைரலாகி அவரை கைது செய்ய போலீசார் தனிடைப்பை அமைத்து தேடி வந்தனர். இதனை அறிந்த அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில், '' அதில் பட்டா கத்தியுடன் இருக்கும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டதாகவும் தற்போது இது மாதிரியான வீடியோக்கள் எதுவும் நான் வெளியிடவில்லை.. ஏற்கனவே போலீசார் என் மீது கஞ்சா வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியதாகவும் தற்போது நான் திருமணமாகி ஆறு மாத கர்ப்பிணியாக கணவருடன் வாழ்ந்து வருகிறேன். நான் இப்போது நல்ல பெண்ணாக கணவனுடன் குடும்பம் நடத்தி வருகிறேன். என்னுடைய ஹேர் ஸ்டைலை கூட மாற்றிவிட்டேன்.. ஆனாலும் எனது பழைய வீடியோவை வைத்து போலீசார் என்னை தேடி வருகின்றனர். தனது நண்பர்களை காவல்துறையினர் பிடித்து வைத்துக்கொண்டு நான் வந்தால் தான் விடுவேன் என மிரட்டிவருவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக கோவையை சேர்ந்த தருண் என்கின்ற இன்ஃபெண்ட் ராஜ் என்ற இளைஞர் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் rowdy-baby-007 என்ற ஐடியில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆயுதங்களை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்துகின்ற வகையில் பதிவேற்றம் செய்ததற்காக அவர் மீது ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இவர் மீது போதைப் பொருள் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், இந்த நடவடிக்கையை நீர்த்துப்போக விடாமல் தொடர்ந்து தனி கவனம் எடுத்து மேற்கொள்ள வேண்டும் என்றும் இளம் பருவத்தினரிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி