ஆப்நகரம்

இது எங்க ஆட்சி... குடிபோதையில் திமுக கவுன்சிலர் ரகளை.. கெஞ்சிய போலீஸ்.. மக்கள் வயிற்றெரிச்சல்

விழுப்புரம் அருகே நடுரோட்டில் காரை நிறுத்தி குடிப்போதையில் ரகளையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலரால் பரபரப்பு

Samayam Tamil 27 Nov 2022, 4:27 pm
விழுப்புரம் மாவட்ட முகையூர் அருகே உள்ள ஆ.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. திமுக மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வரும் ராஜிவ்காந்தி தனது ஆதரவாளர்களுடன் நேற்றிரவு விழுப்புரத்தில் இருந்து தனது சொந்த ஊரான ஆ.கூடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரில் பயணித்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்களான அனைவருமே முழு குடிப்போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil dmk councillor


இந்நிலையில், முகையூர் அருகே ஆயந்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அருகே திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தியின் கார், விபத்தை ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக சென்றதைக் கண்டு அவ்வழியாக சென்ற ஆயந்தூர் கிராம மக்கள் மெதுவாக செல்லும் படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி, தனது காரை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு ஆதரவாளர்களுடன் காரில் இருந்து கீழே இறங்கி நின்றுவிட்டார்.

இதனால் ஆயந்தூரில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுரோட்டில் நிறுத்தப்பட்ட காரை எடுக்குமாறு கூறிய ஆயந்தூர் கிராம மக்களிடம் குடிப்போதையில் இருந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களும் தகராறில் ஈடுபட்டு நாங்கள் ஆளும் கட்சியினர் அப்படி தான் செய்வோம், உங்களால் முடிந்ததை பாருங்கள் எனக் கூறி தகராறு செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆயந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திமுக அராஜகம் ஒழிக என கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிப்போதையில் நடுரோட்டில் காரை நிறுத்தி விட்டு ரகளையில் ஈடுபட்ட திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தியிடம் காரை எடுக்குமாறு கூறினர். ஆனால் போலீசாரிடமும் காரை எடுக்க முடியாது எனக் கூறி ராஜீவ்காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மருமகன் அடித்ததில் மாமனார் உயிரிழப்பு... வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

பின்னர் ஒரு வழியாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடுரோட்டில் நிறுத்தி வைத்து விட்டு ரகைளையில் ஈடுபட்ட திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தியை சமாதானம் செய்து காரை எடுக்க வைத்து அனுப்பி வைத்தனர்.

குடிப்போதையில் நடுரோட்டில் திமுகவினர் செய்த ரகளைக் காரணமாக ஆயந்தூரில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தியின் சொந்த ஊரான ஆ.கூடலூர் கிராம மக்களுக்கும், ஆயந்தூர் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருவதால் இருக் கிராமங்களிலும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

அடுத்த செய்தி