ஆப்நகரம்

வாடகைக்கு குடியிருந்த பெண் அடித்துக்கொலை... வீட்டு ஓனருக்கு ஆயுள் தண்டனை..

சென்னை அருகே குடும்ப சண்டையில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

Samayam Tamil 28 Feb 2023, 3:30 pm
மனைவி பிரிய காரணம் எனக் கூறி, தனது வீட்டில் வாடகைக்கு வசித்த பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil court order


சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த மோசஸ் ஷரக், அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த கற்பகம் என்பவர் சமாதானம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் மோசஸின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார்.

இதற்கு கற்பகம் தான் காரணம் எனக் கூறி பிரச்னை செய்ததால், கற்பகம் வீட்டை காலி செய்து விட்டு பக்கத்து தெருவுக்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில், 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பழைய வீட்டின் அருகில் நண்பர்களை சந்திப்பதற்காக கற்பகம், தனது கணவர், மகள் மற்றும் மகனுடன் வந்துள்ளார். அவர்களைப் பார்த்த மோசஸ், வீட்டில் இருந்து சுத்தியலுடன் வந்து கற்பகத்தின் தலையில் அடித்து விட்டு தப்பியோடினார்.

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மாயமான முதியவர் இறப்பு? சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கற்பகம், மறுநாள் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பதிவு செய்த வழக்கை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

சம்பவத்தை நேரில் பார்த்த கற்பகத்தின் கணவர் மற்றும் குழந்தைகள் அளித்த சாட்சியத்தின் மூலம், மோசஸுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, மோசஸுக்கு ஆயுள் தண்டனையும், 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முகமது பாரூக் தீர்ப்பளித்தார்.

அடுத்த செய்தி