ஆப்நகரம்

தோழிக்கு அஞ்சலி செலுத்த ப்ரீசர் பெட்டியை தொட்டதும் வாலிபர் பலி.. சென்னையை உலுக்கிய சம்பவம்

மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த வாலிபரை ப்ரீசர் பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலியான பரிதாபம்

Samayam Tamil 20 Feb 2023, 2:19 pm
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, ப்ரீசர் பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil crime news


சென்னை, திருவொற்றியூர் ,ராஜா கடை, திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவர் நந்தினி, இவரது மகள் அபிநயா (16). இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் ஒன் படித்து வந்தார். இந்த நிலையில், காது வலியால் அவதிப்பட்டு வந்த அபநயா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அபிநயா இறந்து விட்டார்.

மரணத்தில் குழப்பம்

காது வலிக்காக வந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தவறான சிகிச்சையால் தான் அபிநயா இறந்ததாக கூறி, அவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின் போலீசாரின் சமரச பேச்சுக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலி வாங்கிய ப்ரீசர் பெட்டி

இந்த நிலையில், அவரது இல்லத்தில் இறுதி சடங்கிற்காக அபிநயா உடல் ப்ரீசர் பெட்டியில் வைக்கப்படிருந்தது. உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த அஜித் (19) என்பவர் அபிநயாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது ப்ரீசர் பெட்டியில் கை வைத்தபோது, மின்சாரம் தாக்கி அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அந்த பெட்டியை தொட்ட சிலரையும் மின்சாரம் தாக்கியது.

அநியாய மரணம்

சர்ச்சையான முறையில் பள்ளி மாணவி கோரமாக இறந்த சம்பவத்தால் அப்பகுதியினர் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில் அஞ்சலி செலுத்த வந்த 19 வயது வாலிபனும் அநியாயமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

அடுத்த செய்தி