ஆப்நகரம்

ஹெலிகாப்டர் விபத்து: சற்று முன்பு எடுக்கப்பட்ட வீடியோ... கருப்பு பெட்டியும் கண்டெடுப்பு...

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 9 Dec 2021, 1:04 pm
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இந்திய முப்படை கூட்டு தளபதி பிபின் ராவத் (63), அவரது மனைவி மதுளிக ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்தனர். நேற்று நேற்று சரியாக 11.47 மணி அளவில் கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து குன்னுர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்ற நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக பாதை தெரியாமல் மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
Samayam Tamil helicopter crash video


இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையில் இந்திய விமானப்படையின் முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், குன்னூர் காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

காட்டேரி மலை பகுதியில் தாழ்வாக பறந்துகொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்திற்குள் சென்ற சில நொடிகளில் விபத்துக்குள்ளாகும் சத்தமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவர்கள் ஹெலிகாப்டர் உடைந்து நொறுங்கும் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைவதும் அந்த வீடியோவில் காண முடிகிறது. முன்னதாக, முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேருடைய உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.


அதன்பின் இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தேசிய தலைவர்கள் பலரும் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரைந்தனர். இதனை அடுத்து ராணுவ வீரர்களின் உடல்கள் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை வழியாக கொண்டு வரப்பட்டு இங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் உடல்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.


இதற்கிடையில், விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆய்வு நடந்த பிறகே ஹெலிகாப்டர் விபத்துக்கான உண்மை காரணம் தெரிய வரும்.

அடுத்த செய்தி