ஆப்நகரம்

கோவை அருகே கார் ஒர்க்ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை!

கோவை பீளமேடு அருகே கார் ஒர்க்ஷாப் உரிமையாளரை, கூலிப்படையினர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Apr 2019, 11:44 am
கோவை பீளமேடு அருகே கார் ஒர்க்‌ஷாப் உரிமையாளரை, கூலிப்படையினர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோவை அருகே கார் ஒர்க்ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை!
கோவை அருகே கார் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை!


வேலுார் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பரந்தாமன் (37). இவர் கோவை, பீளமேடு அருகே உள்ள சவுரிபாளையம் இந்திராநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

பரந்தாமன் விபத்தில் சிக்கும் ஆடம்பர கார்களை வாங்கி, சரி செய்து விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று மதியம், போத்தனுார் - ஈச்சனாரி சாலையிலுள்ள தனது ஒர்க்ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடன் பெண் உள்ளிட்ட மூன்று பணியாளர்களும் இருந்தனர்.

அப்போது திடீரென ஒர்க்ஷாப்பில் நுழைந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், பணியாளர்களை மிரட்டி அறைக்குள் அடைத்துவிட்டு, பரந்தாமனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. தகவலறிந்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஒர்க்‌ஷாப் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை தேடினர். ஆனால், அது கூலிப்படையினரால் ஏற்கெனவே உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கார் விற்பனை தொடர்பாக பரந்தாமனுக்கு சிலருடன் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபர்களில் யாரோ, கூலிப்படையை அனுப்பி கொலை செய்திருக்கலாம். போலீசாரின் விசாரணையில் கொலையாளிகளுக்கு 25 - 30 வயது இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி