ஆப்நகரம்

அடேங்கப்பா; இத்தனை கோடியா, அதுவும் கிலோக்கணக்கில் போதைப் பொருள் -சென்னையில் பரபரப்பு!

விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த போதைப் பொருள் சிக்கியது.

Samayam Tamil 22 Feb 2020, 8:27 am
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்கும். அதையும் மீறி கடத்தல் சம்பவங்களை அரங்கேற்ற சில மோசடிக்காரர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்னாட்டு சரக்குப்பிரிவில் வெளிநாட்டிற்கு அதிக அளவிலான போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விமான நிலைய சரக்குப்பிரிவு சுங்க இலாகா அதிகாரிகள் உடன் இணைந்து பார்சல்களை சோதனையிடத் தொடங்கினர்.
Samayam Tamil Chennai Airport


அப்போது ஆஸ்திரேலியாவிற்கு செல்லவிருந்த பார்சலில் இருந்து வாய்ப் புத்துணர்ச்சிக்கான சீரக உருண்டை என்ற பார்சல் இருந்தது கண்டறியப்பட்டது. அதன்மீது சந்தேகம் ஏற்பட்டதால் உடனே பிரித்து பார்த்தனர்.

அதில் இருந்து கடுமையான நெடி வந்தது. அந்த உருண்டைகளை எடுத்து ஆய்விற்கு அனுப்பினர். இது ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் விளையும் ஓபியம் என்ற போதைப் பொருள் என்று தெரியவந்தது.

இதைக் கொண்டு ஹெராயின் என்ற பயங்கர போதைப் பொருள் தயாரிக்க முடியும். இது 11 கிலோ 680 கிராம் அளவிற்கு இருந்தது. இதன் மதிப்பு மட்டும் ரூ.2 கோடியே 33 லட்சம் என்று கூறுகின்றனர். உடனே பார்சலில் இருந்த முகவரிக்கு சென்று அதிகாரிகள் விசாரித்தனர்.

எல்லாம் கூட்டுக் களவாணிகளா? போலி நகையால் இத்தனை லட்சம் போச்சே - வங்கிக்கே டாட்டா காட்டிய கும்பல்!

அங்கிருந்த வாலிபரை மத்திய போதைப் பொருள் அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பல கோடி மதிப்பில் பயங்கரமான போதைப் பொருள் சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது எங்கிருந்து வந்தது என தீவிர விசாரணை நடைபெறுகிறது. இதேபோல் ஆஸ்திரேலியாவிற்கு செல்லவிருந்த மற்றொரு பார்சலில் புடவை மற்றும் துணிகள் இருப்பதாக தெரியவந்தது. அதையும் பிரித்து பார்த்த போது துணிகளுக்கு நடுவே படிகத் தூள் பாக்கெட்கள் இருந்தன.

அதனை ஆய்வுக்கு அனுப்பியதில் எபித்தீன் என்ற போதைப்பொருள் என்ற அதிர்ச்சிகர தகவல் கிடைத்தது. 4 கிலோ 785 கிராமில் இருந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வெளிநாட்டிற்கு கடத்தவிருந்த ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 16 கிலோ 465 கிராம் போதைப் பொருள் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி