ஆப்நகரம்

விக்னேஷ் கஸ்டடி மரணம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் 6 பேருக்கு ஜாமீன்..!

விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2022, 3:08 pm
சென்னை பட்டினம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நள்ளிரவு தலைமை செயலக காலனி போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் இருந்த விக்னேஷுக்கு 19 ஆம் தேதி காலை வலிப்பு, வாந்தி ஏற்பட்டு இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
Samayam Tamil vignesh lockup death


ஆனால், போலீசார் அவரை பலமாக அடித்து தாக்கினர் என்றும் அதனாலேயே விக்னேஷ் இறந்தார் என்றும் சம்பவத்தின்போது விக்னேஷுடன் இருந்தவரும், உறவினர்களும் குற்றம்சாட்டினார். அதை உறுதி செய்யும் விதமாக விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில், விக்னேஷ் இறப்பதற்கு முன்பு முகம் உட்பட உடலில் 13 காயங்கள் இருந்ததாகவும், வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, விக்னேஷ் லாக்கப் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைதான 6 பேர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை விசாரணையில் வாலிபர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்னேஷ் மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி