ஆப்நகரம்

வண்ணாரப்பேட்டை சிறுமி வழக்கு: பாஜக பிரமுகர் உட்பட 21 பேருக்கு தண்டனை அறிவிப்பு!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சீரழித்த 21 குற்றவாளிகளுக்கு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 26 Sep 2022, 1:33 pm
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் உறவினர் சகிதா பானு (22), செல்வி (50), அவரது மகன் மதன்குமார் (35), சந்தியா (23), மகேஸ்வரி, பாஜகவைச் சேர்ந்த தரகர் ராஜேந்திரன் (44), எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil chennai pocso


அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்டவர்கள் இதுபோல, பல சிறுமிகளை மிரட்டி வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் மகேஸ்வரி, வனிதா, ஈஸ்வரி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். மொத்தம் இந்த வழக்கில் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 4 பேர் தலைமறைவாகினர். அதில் ஒருவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சிறுமி உறவினர் உட்பட 7 பெண்கள், பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிபதி ராஜலக்ஷ்மி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வாசிக்கபட்டபோது 6 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், எண்ணூர் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்த போக்சோ வழக்கில் கைதானவர்களில் 21 பேருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி