ஆப்நகரம்

திருமணம் ஆகாத இளம் பெண்களுக்குக் குறி.! அமைந்தகரையில் கைவரிசை காட்டி வந்த போலி சாமியார் கைது..

சென்னை அருகே திருமணம் ஆகாத இளம்பெண்களுக்குச் சிறப்புப் பூஜை செய்வதாகக் கூறி 100 பவுன் நகைகளை மோசடி செய்து ஏமாற்றிய போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 16 Sep 2019, 6:44 pm
சென்னை அமைந்தகரை பொண்ணுவேல் பிள்ளை தோட்டம் 5 வது தெருவில் வசித்து வருபவர் ஆனந்தன்(24). இவர் நீண்ட நாட்களாகப் போலி சாமியாராக நாடகமாடி வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத பெண்களுக்குச் சிறப்புப் பூஜை செய்வதாகக் கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
Samayam Tamil 7


அதாவது சம்மந்தப்பட்ட பெண்களின் வீட்டில் பூஜை செய்யும் போது வீட்டில் இருக்கும் தங்க நகைகளைக் கொண்டுவந்து பூஜையில் வைக்கச் சொல்வது இவரது வழக்கம். பூஜை முடிந்த பிறகு அந்த நகையை 21 நாட்கள் கலசத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடாது எனக் கூறிவிட்டு லாவகமாகத் திருடி சென்றுள்ளார்.

இதுபோல் அந்தப் பகுதியில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 100 பவுன் நகை வரை நூதன முறையில் திருடியுள்ளார். திருடிய நகைகளை அதே பகுதியில் உள்ள அடகுக் கடையில் வைத்து பணம் பெற்று வந்திருக்கிறார். அந்த பணத்தை வைத்துத் தான் வாங்கிய கடன்களையும் மேலும் சொந்த தேவைக்காகவும் பயன்படுத்தி வந்துள்ளார் போலி சாமியார் ஆனந்தன்.

பூஜை முடிந்து நகைகளைத் திரும்பக் கேட்ட பெண்களிடம் நகையைக் கொடுக்க மறுத்த ஆனந்த் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஊரெங்கும் போலி சாமியார்கள் சிக்கி வரும் நிலையில் தாமாக வந்து சிக்கிக் கொள்ளும் பெண்கள் இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

அடுத்த செய்தி