ஆப்நகரம்

தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு!

திருச்சி அருகே தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறிவிழுந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jun 2019, 5:49 pm
திருச்சி அருகே தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறிவிழுந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு!
தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு!


திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உறையூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் - சங்கீதா தம்பதியின் மூத்த மகள் இலக்கியா 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதிய உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்த மாணவி இலக்கியா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தால் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் இலக்கியாவை இலக்கியாவை அழைத்து சென்று வகுப்பறையில் படுக்க வைத்தனர். மூன்று மணிநேரம் கழித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளிக்கு வந்த பெற்றோர் மாணவியை அழைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அபாய கட்டத்தில் உள்ளதாக கூறியதை தொடர்ந்து உடனடியாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்த 3 நாட்களாக தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி இலக்கியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களின் அஜாக்கிரதையால் மாணவி உயிரிழந்ததாகக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் திருச்சி துறையூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இறந்த இலக்கியாவின் தாய் சங்கீதா கூறியபோது; எனது மகள் அடிபட்டு 3 மணி நேரத்திற்குப் பின்னரே எனக்கு தகவல் தெரிவித்தனர். நான் எனது தம்பி அனுப்பி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது வலிக்குது என்று மட்டுமே சொன்னார். தலைமையாசிரியர் மருத்துவமனையில் சேர்த்த பின்பு ஒருநாள் மட்டும் வந்து பார்த்தார். அதன்பின் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. என் குழந்தையை போன்று இனிமேல் வேறு எந்த மாணவிக்கும் நிகழக்கூடாது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்ராசு கூறுகையில் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்து சரியான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல காவல்துறை உதவி ஆணையர் ராமச்சந்திரன் இலக்கியா மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

அடுத்த செய்தி