ஆப்நகரம்

மாமூல் ரவுடிகள் சிக்க உதவிய காங்கிரஸ் பிரமுகருக்கு கத்தி குத்து... சென்னையில் பயங்கரம்

சினிமா படத்தில் வரும் குத்துசண்டை காட்சிகள் போல அப்பாவிகளை போதையில் மாமூல் கேட்டு அடிக்கும் இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசாரிடம் சிக்க வைத்த காரணத்தால் காங்கிரசு பிரமுகர் ரவுடிகும்பலால் வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 29 Oct 2022, 5:29 pm
சென்னை பெரியமேடு காட்டூர் சடையப்பன் தெருவில் வசிப்பவர் அப்ரோஸ் அகமது(37). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஆர்டிஐ பிரிவில் மாநில செயலாளராக உள்ளார். மேலும் இவர் பெரியமேடு பகுதியில் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு லைட், பந்தல் போடும் கடை வைத்துள்ளார்.
Samayam Tamil chennai crime


இந்நிலையில் நேற்று இரவு அப்ரோஸ் கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தாங்கள் சிறைக்கு செல்ல நீ தான் காரணம் என கூறி அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அப்ரோஸ் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அப்ரோஸ் அளித்த புகாரின் பேரில் பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியமேடு பகுதியில் உள்ள உணவகத்தில் மாமூல் கேட்டு தகராறு செய்து உணவு அருந்த வந்த அப்பாவி வாலிபர் போதை ஆசாமிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி பேசும் பொருளானது. இதில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

'ஒற்றை ஓநாய் தாக்குதல்'.. கோவை கார் வெடிப்பில் கையாளப்பட்ட முறை..!

சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வந்த அதே கும்பல் கடந்த மாதம் 30 ஆம் தேதி இரவு பெரியமேடு பகுதியில் கொரியர் நிறுவன ஊழியரை மாமூல் கேட்டு அடித்து உதைத்து, பணத்தை பறித்து சென்றது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் பேசுப்பொருளானது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பெரியமேடு போலீசார் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்ட பெரியமேடு பேரக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த லோடுமேன் கபில்(27), விக்னேஷ்(27) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த இரு முறையும் மாமூல் கேட்டு தாக்கிய நபர்கள் குறித்த தகவல்களை அப்ரோஸ் தான் போலீசாருக்கு தெரிவித்ததாக கைதானவர்களுக்கு தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து இருவரும் தங்கள் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த அப்ரோஸ்சை பழிக்கு பழிவாங்க எண்ணி நேற்று இரவு கூட்டாளிகளுடன் அப்ரோஸ் கடைக்கு சென்று, சிசிடிவி வெளியிட்டு தங்களை சிக்கவைத்தது நீ தான் என போலீஸ் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளனர். அதற்கு இல்லை என அப்ரோஸ் மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் வெட்டி தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தப்பி ஓடிய கபில், விக்னேஷ் ,லோகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வேப்பேரி உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மாமூல் கேட்டு தகராறில் ஈடுப்பட்ட ரவுடிகள் குறித்த தகவல் தெரிவித்ததால் வெட்டப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்...

அடுத்த செய்தி