ஆப்நகரம்

பெண் குழந்தையை ரூ.1.8 லட்சத்துக்கு விற்ற தந்தை உள்பட 5 பேர் கைது

குழந்தை விற்கப்பட்ட சம்பவம் அரசல் புரசலாக ஊர் முழுவதும் பேசப்பட்டதை தொடர்ந்து, விக்ரமசிங்கபுரம் போலீசாரின் காதுகளுக்கும் எட்டியுள்ளது

Samayam Tamil 21 Nov 2019, 1:27 pm
நெல்லை: பெண் குழந்தையை ரூ.1.8 லட்சத்துக்கு விற்ற தந்தை உள்பட 5 பேர் நெல்லை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே ஆறுமுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் யேசுஇருதயராஜ் (38). கூலி வேலை செய்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அந்த பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த யேசுஇருதயராஜ், புஷ்பலதா (35) எனும் பெண்ணை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ராமநாதபுரம்: பெண்ணின் வயிற்றில் ஊசி - அரசு மருத்துவர்களின் அலட்சியம்!

யேசுஇருதயராஜ், புஷ்பலதா தம்பதிக்கு 13, 9 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும், 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்த சூழலில் மீண்டும் கருத்தரித்த புஷ்பலதாவுக்கு கடந்த 3ஆம் தேதியன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

இதையடுத்து நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவரும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆவலோடு இருந்த கூலி பணியாளருமான தங்கதுரையிடம் (45), தனக்கு பிறந்த பெண் குழந்தையை ரூ.1.2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.35,000 மதிப்புள்ள தங்க செயினுக்கு விற்றுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தில் தரகர்களாக செயல்பட்ட செல்வம், நெல்லையப்பர், கண்ணன் ஆகியோர் ரூ.60,000 பெற்றுள்ளனர்.

சிஷ்யைகள் இருவர் கைது: அடுத்து நித்யானந்தா தான்!

இந்த விவகாரம் அரசல் புரசலாக ஊர் முழுவதும் பேசப்பட்டதை தொடர்ந்து, விக்ரமசிங்கபுரம் போலீசாரின் காதுகளுக்கும் எட்டியுள்ளது. தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் சென்ற போலீசார் யேசுஇருதயராஜ், தங்கதுரை, செல்வம், நெல்லையப்பர், கண்ணன் ஆகிய ஐந்து பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த ரூ.42,000 ரொக்கம் மற்றும் தங்க செயினை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், விற்கப்பட்ட பெண் குழந்தையும் மீட்கப்பட்டு ஆலங்குளத்தில் உள்ள விடியல் ஆதரவற்றோர் இல்லத்தில் தற்காலிகமாக ஒப்படைக்கபட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழந்தைகள் நல குழுவின் முன்பு விரைவில் அக்குழந்தை ஒப்படைக்கப்படவுள்ளது. அங்கு எடுக்கப்படும் முடிவின் படி, குழந்தை அதன் தாயிடமோ அல்லது தற்காலிகமாக குழந்தைகள் நல காப்பகத்திலோ ஒப்படைக்கப்படும்.

காதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்

குழந்தை விற்கப்பட்ட சம்பவம் அதனுடைய தாய் புஷ்பலதாவுக்கோ, அதனை விலை கொடுத்து வாங்கிய தங்கதுரையின் மனைவிக்கோ தெரியாது என தெரிவித்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி