ஆப்நகரம்

கொரோனா நோயாளிக்கு பாலியல் துன்புறுத்தல் - பெங்களூரு மருத்துவரால் அதிர்ச்சி!

வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Aug 2020, 12:44 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக பலரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 25ஆம் தேதி பெண் நோயாளியை மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு 10 மணியளவில் வந்த மருத்துவர் அப்பெண்ணை முறையற்ற வகையில் தொட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Bangalore Victoria Hospital


இதுபற்றி கோவிட் வார்டு நோடல் அதிகாரியான டாக்டர் அசிமா பானுவிடம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து விஷயம் வெளியே தெரிந்துள்ளது. உடனே மருத்துவமனை நிர்வாகத்திடம் பானு கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விவி புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிமுக பிரமுகரின் அடியாளான போலீஸ், தீக்குளித்து ஒருவர் தற்கொலை!

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், பெண் நோயாளிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் எஸ்.பாலாஜி பாய் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றார். இருப்பினும் நடந்த சம்பவம் குறித்தோ, குற்றம்சாட்டப்பட்டவர் குறித்தோ போதிய தகவல்களை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும், விரைவில் முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரிக்க மருத்துவமனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை மேலாண் மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஓரிரு நாட்களில் அறிக்கை சமர்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி