ஆப்நகரம்

தென்காசி: ஊரடங்கில் காட்டுக்குள் சுற்றினாலும் கைது!

சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வன பகுதியில் வேட்டை நாய்களுடன் வேட்டையாட வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 30 Apr 2020, 4:35 pm
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து அனாவசியமாக வெளியே சுற்றித் திரிபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஊருக்குள் சுற்றினால் தானே கைது செய்வீர்கள் நாங்கள் காட்டுக்குள் இறங்குகிறோம் என சிலர் வேட்டையாட கிளம்பியுள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தேவியார் பீட் செங்குளம் கண்மாய் பகுதிகளில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த முருகன், தமிழரசன், கணேஷ்குமார், கார்த்திக் ராஜா, காளிராஜ் , கருப்பசாமி, மந்தையா மற்றொரு கருப்பசாமி ஆகியோர் அரிவாள், டார்ச்லைட், வேட்டை நாய்களுடன் வேட்டையாட சென்றுள்ளனர்.

பொது முடக்கம் எங்கெல்லாம் தளர்த்தப்பட வாய்ப்பு?

சிவகிரி வனச்சரக அலுவலர் சுரேஷ் அவர்கள் தலைமையில் வனப் பணியாளர்கள் வேட்டையாட வந்த 8 நபர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட வந்தது தெரியவந்தது. இதையடுத்து எட்டு பேரும் கைது செய்யப்பட்டு மேலும் நபர் ஒன்றுக்கு 25 ஆயிரம் வீதம் 8 நபர்களுக்கு 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொது முடக்கம் காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பசியைப் போக்க சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சட்ட விரோதமாக சிலர் வேட்டையாட கிளம்புவது தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

அண்மையில் முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி