ஆப்நகரம்

பலூன் விற்பது போல் வேடமிட்டு திருடமுயன்ற ஐந்து வடமாநில பெண்கள் கைது!

ஜோலார்பேட்டை அருகே பகல் நேரங்களில் பலூன் விற்பது போல் வேடமிட்டு, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து வடமாநில பெண்களை போலீசார் கைது செய்தனர்!

Samayam Tamil 18 Jun 2019, 8:53 am
ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் பீடி கம்பெனி அலுவலகத்தில் பணத்தை திருடி, தப்பமுயன்ற ஐந்து வடமாநில பெண்களை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
Samayam Tamil பலூன் விற்பது போல் வேடமிட்டு திருடமுயன்ற ஐந்து வடமாநில பெண்கள் கைது!
பலூன் விற்பது போல் வேடமிட்டு திருடமுயன்ற ஐந்து வடமாநில பெண்கள் கைது!


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பக்ரிதக்கா குயில்மண்டி தெருவில் வசிப்பவர் இலியாஸ் (39). இவர் அதே பகுதியில் பீடி கம்பெனி நடத்தி வருகிறார். இலியாஸ் நேற்று அலுவலகத்தை மூடிவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் குழந்தையுடன் சென்று பீடி கம்பெனி அலுவலகம் முன்பு அமர்ந்து கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அலுவலகத்தின் ஷட்டரை திறந்து கல்லாவில் இருந்த ரூ. 5 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றனர். மேலும் அலுவலகத்தின் மாடிக்குச் சென்று அங்கிருந்த ஷட்டரை சிறிதளவு திறந்து குழந்தையை உள்ளே நுழைய விட்டு, அங்கிருந்த பீடி பண்டல்களை திருடியுள்ளனர்.

இதனிடையே சிறிது நேரத்தில் அலுவலகம் திரும்பிய இலியாஸ், ஷட்டர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, ஐந்து பெண்கள் குழந்தையுடன் உள்ளே இருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் இலியாஸ் வடமாநில பெண்களை சுற்றிவளைத்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்த ஐந்து பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஐந்து பேரும் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள முன்காவாலி மாவட்டத்தைச் சேர்ந்த லகான் மனைவி நந்து (21), சான்தோஷ் மகள் பேபி (20), பாபுலால் மனைவி சாய்ராபாய்(55), பாலு மகள் காஜல் ( 20), அஜய் மனைவி குகனா (20) என்பதும், இவர்கள் ஆங்காங்கே பலூன் விற்கும் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

பகலில் கொள்ளையடிப்பதற்காக இடங்களை தேர்வு செய்து, அந்த பகுதியில் நோட்டமிட்டு, பின்னர் பெண்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 வடமாநில பெண்களை கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி