ஆப்நகரம்

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை... அரசு அலுவலர் பதவியிறக்கம்!

பெண் ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பதவியிறக்கம் செய்து ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 28 May 2022, 6:48 pm
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன். இவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
Samayam Tamil thoothukudi news


பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் கொடுத்த புகாரை தொடர்ந்து நாராயணன் தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இரு நிலை கீழ் இறக்கம் செய்யப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலிருந்து இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், இதே போன்ற பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது பிற பெண் அரசு ஊழியர்களும் தைரியமாக எதிர்த்து நிற்கும் வண்ணம் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 பிரிவு 13 மற்றும் 15(அ) இன் படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து ரூ.10,000/- ஒரே தவணையில் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க மாவட்ட ஆட்சித்தலைவரால் ஆணையிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி