ஆப்நகரம்

நீதிமன்ற வளாகத்துக்குள் பெண் மீது ஆசிட் வீச்சு; கோவையில் அடுத்த அதிர்ச்சி..!

கோவை நீதிமன்ற வளாகத்தில் வாய்தாவிற்காக வந்த பெண் மீது ஆசிட் வீசிய கணவரால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Mar 2023, 1:11 pm
கோவையை உலுக்கி வரும் வெடிகுண்டு, கொலை சம்பவங்களுக்கு மத்தியில் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்து பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kovai crime


கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் கவிதா மற்றும் அவரது கணவர் சிவக்குமார் இருவரும் காத்திருப்போர் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது, சிவக்குமார் தண்ணீர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை திடீரென கவிதாவின் மீது வீசியுள்ளார்.

உடலில் ஆசிட் பட்டதும் துடித்து போன கவிதா அலறவே அருகிலிருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இதனிடையே சிவக்குமாரை சுற்றி வளைத்த வழக்கறிஞர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சிவகுமாரை பத்திரமாக மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது, போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நுழைந்து, ஆசிட் வீசிய நபரை ஏன் பாதுகாப்பாக அழைத்து செல்கிறீர்கள்? என வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்து கூட்டத்துக்குள் புகுந்து சிவகுமாரை விடாமல் தாக்க முற்ப்பட்டனர். சம்பவம் குறித்து வெளியான முதற்கட்ட தகவலில், கோவையை சேர்ந்த கணவன் மனைவி சிவகுமாருக்கும், கவிதாவுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மனைவி கவிதா கணவர் மீது புகார் தொடுத்திருந்தார்.

ஜேபி நட்டாவுடன் டேரக்ட் டீலிங்.. 90 லட்சத்தை சுருட்டிய மோசடி மன்னன்.!

இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடக்கவிருந்த விசாரணைக்கு இருவரும் ஆஜராக வந்தபோது மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆசிட்டை கொண்டுவந்து கவிதா மீது வீசியுள்ளார் சிவகுமார். மேலும், ஆசிட் வீச்சை தடுக்க முயன்ற வழக்கறிஞர் மீதும் ஆசிட் வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து சிவகுமாரிடம் விசாரணை நடந்து வருவதாக கோவை காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி