ஆப்நகரம்

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு; வரிசையாக வந்த பள்ளி நிர்வாகிகள்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று முதல் நான்கு வாரங்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி காலை மாலை இருவேளை ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற உத்தரவின் பேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

Samayam Tamil 29 Sep 2022, 7:23 pm
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளியின் மேல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி மரண வழக்கானது மர்ம மரண வழக்காக மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Samayam Tamil kaniyamoor case


மாணவி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை போலீசார் கடந்த 17 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டுமென ஜாமீன் தாக்கல் செய்ததை விழுப்புரம் நீதிமன்றம் நிரகாரித்தது.

அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டதற்கு விசாரனை செய்த சென்னை உயர் நீதிமன்றம் 5 பேருக்கும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் முதல்வர் ஆகியோர் மதுரையிலும் ஆசிரியர்கள் இருவரும் சேலத்திலேயே தங்கி கையெழுத்து இட வேண்டுமென உத்தரவின் பேரில் 30 நாட்கள் கையெழுத்திட்டனர். இந்நிலையில் கையெழுத்து இட வேண்டிய 30 நாட்கள் முடிந்த நிலையில் உயர் நீதிமன்றம் 5 பேரும் விழுப்புரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 4 வாரங்களுக்கு காலை மாலை இரு வேளை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த 5 பேரும் விழுப்புரம் வண்டிமேட்டிலுள்ள சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி கையெழுத்திட்டனர். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி மரண வழக்கில் வெளியிட்டப்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகள் யாருக்கெல்லாம் கொடுத்துள்ளீர்கள் என்பது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் இன்று விசாரனை செய்தனர்.

அடுத்த செய்தி