ஆப்நகரம்

ஆருத்ரா வழக்கு: ஆர்.கே. சுரேஷுக்கு இறுகும் பிடி - குடும்பத்தை பாக்கணும்னு கெஞ்சல்..!

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷுக்கு அனுப்பிய சம்மனை சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்ய மறுப்பு

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 22 Apr 2023, 1:26 pm
சென்னை அமைந்தகரையில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மாதத்திற்கு 25 முதல் 30% வட்டி தருவதாகக் கூறி 2,400 கோடி வரை முதலீடு பெற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றியது. இதுதொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல்ராஜ் உட்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Samayam Tamil rk suresh


இந்த வழக்கில் கைதாகியுள்ள ரூசோ என்பவர் கொடுத்த தகவலின் பேரில் பாஜகவை சேர்ந்தவரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் சிக்கியுள்ளார். ஆர்கே சுரேஷ் பாஜகவில் இருப்பதால் அவருக்கு தெரிந்த பெரிய ஆட்கள் மூலம் ஆருத்ரா வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு சுரேஷிடம் ரூசோ 12 கோடி ருபாய் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து ஆர்.கே. சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால், அதற்குள் அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இதனால் ஆர்.கே. சுரேஷை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் அந்த சம்மனை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே. சுரேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வெளிநாட்டில் என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் தற்போது என்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது. ஆருத்ரா வழக்கில் அரசியல் நோக்கத்தில் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோவை சந்தித்தேன். அது சம்மந்தமாகத்தான் பண பரிவர்த்தனை நடந்தது எனவே இந்த சம்மனை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே. சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலீசார் அனுப்பியுள்ள சம்மனில் ஆர்.கே. சுரேஷ் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர் ஆனால் என்னென்ன ஆவணங்கள் என்று சொல்லவில்லை எனவே இந்த சம்மனை தடை செய்யுமாறு வாதம் செய்தார்.

அப்போது போலீசார் தரப்பில், ஆவணங்களின் விவரங்கள் குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் சம்மனை தடை செய்யக்கூடாது என்றும் கூறினர். போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டு ஆர்.கே. சுரேஷின் கோரிக்கையை நிராகரித்தார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி