ஆப்நகரம்

கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது - மதுரை கோர்ட்

கருணை அடிப்படையிலான பணியை, தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனக்கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது. அதனை உரிமையாக கோர முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

Samayam Tamil 16 Aug 2022, 6:46 pm
தேனியைச் சேர்ந்த பேபி ஷாலினி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது தந்தை பாண்டி, ஆண்டிபட்டி சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். 1999ஆம் ஆண்டு பணியில் இருந்த போது உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி 2006 ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். ஆனால், அப்போது 18 வயது பூர்த்தி ஆகவில்லை என மனுவை நிராகரித்து விட்டனர்.
Samayam Tamil madurai news


பிறகு 2019 ஆம் ஆண்டு மீண்டும் கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தேன். அதனை வனத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இதனை எதிர்த்து கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி 20 ஆண்டுகள் கழித்து கருணை அடிப்படையில் பணி வழங்க தாமதமாக விண்ணப்பித்துள்ளதாகக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இது ஏற்கத்தக்கதல்ல ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து கருணை அடிப்படையில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "கருணை அடிப்படையில் பணி கோருபவர்கள், பணியில் இருந்தவர் இறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமே தவிர வயது வரம்பு பூர்த்தி ஆகியதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அல்ல. ஆகவே மனுதாரர் தான் வயதுவரம்பு பூர்த்தி ஆனதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்துள்ளதாக கூறுவதை ஏற்க இயலாது.

குழந்தைக்காக இளைஞருடன் பழகி கர்ப்பம்... பாசக்கார கணவன் செய்தது என்ன?

மேலும் கருணை அடிப்படையிலான பணி என்பது இறந்தவரின் குடும்பத்தின் உடனடி பொருளாதாரத் தீர்வுக்காகத்தான். இதை வெகு காலம் காத்திருப்பில் வைக்க இயலாது. பலரும் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனால் அரசு அதில் சீனியாரிட்டி முறையை பின்பற்றி பணி வழங்கி வருகிறது.

கருணை அடிப்படையிலான பணியை, தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனக்கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது. அதனை உரிமையாக கோர முடியாது என கூறி, மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அடுத்த செய்தி