தாம்பரம் மாணவி கொலை
சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே செப்-23 ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதற்காக ஸ்வேதா (25) என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் ராமச்சந்திரன் (25) மாணவியை கத்தியால் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பலமாக குத்தியுள்ளார். இதனால் மாணவி நிலைதடுமாறி விழவே, வாலிபரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாணவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்த நிலையில், வாலிபரை சிகிச்சைக்கு பிறகு கைது செய்தனர். விசாரணையில், ராமச்சந்திரனுடன் பழகுவதை மாணவி நிறுத்திக்கொண்டதால் அவரை கொலை செய்ததாக வாலிபர் வாக்குமூலம் கொடுத்தார். அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாணவி
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி நவம்பர் 11 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்டது. இதனிடையே மாணவியின் கடிதம், ஆசிரியருடன் பேசி வந்த மெசேஜ் உரையாடல்கள் ஆகியவற்றை கொண்டு அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை தொடர்ந்து, மாணவி புகார் கொடுத்ததும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த குற்றத்திற்காக சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் அதே வழக்கை பதிவு செய்து கைது செய்தனர்.
சாஃப்டர் பள்ளி விபத்து
திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் அன்பழகன், சுதீஷ், விஸ்வரஞ்சன் ஆகிய மூன்று மாணவர்கள் பலியானார்கள். இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
மூட்டைக்குள் மாணவி சடலம்:
கோவை சரவணம்பட்டி பகுதி யமுனா நகர் அருகே டிசம்பர் 13 ஆம் தேதி அன்று 15 வயது சிறுமி மாயமானார். போலீசாரின் விசாரணையில், தாய்க்கும் குடும்ப நண்பருக்கும் இருந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக 15 வயது சிறுமியை முத்துக்குமார் என்பவர் கடத்தி பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து சடலத்தின் கை, கால்களை கட்டி மூட்டையில் வீசியது தெரிய வந்தது. தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
பத்ம சேஷாத்ரி காம ஆசிரியர்
சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்தனர். விசாரணையில், மாணவிகளை தகாத முறையில் தொடுவது, மாணவிகளை வர்ணிப்பது, தேவையின்றி மாணவர்களை வெளியே நிற்க சொல்வது, ஆபாச வலைதள இணைப்புகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற செயல்களில் ராஜகோபாலன் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், ஸ்டாஃப் ரூமில் வைத்து மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ உள்ளியிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சென்னை மாநகர கமிஷனர் உத்தரவின்பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோடநாடு வழக்கு அப்டேட்:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் ரகசிய விசாரணை நடத்தினர். அதன் மீதான விசாரணையை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக, இந்த வழக்கின் மறு விசாரணைக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தன்னை திட்டமிட்டு சேர்க்க சதி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதகவும் சயன் கூறி வருகிறார். இதனிடையே, கொடநாடு வழக்கு குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், இது அரசியல் நோக்கத்திலான விசாரணைகள் அல்ல; உண்மை குற்றவாளிகளை கண்டறியும் விசாரணை என கூறினார். தற்போது, வழக்கு சம்பந்தமாக மறுபுலன் விசாரணை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இவர்கள் வழக்குக்குத் தொடர்புடைய பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காம பாபா:
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளி மாணவிகளுக்கு தனது சொகுசு பங்களாவில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா 3 போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் ஜூன் 26ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கரின் சிஷ்யை சுஷ்மிதா ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவசங்கர் பாபா சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வாக்குமூலத்தை பெற்று ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் செங்கல்பட்டு சிபிசிஐடி பொறுப்பு அதிகாரி எஸ்பி விஜயகுமார் தலைமையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதே சமயம், உடல் பிரச்சினைகள் காரணமாக சிவசங்கருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
2021 கொடூர கொலைகள்:
வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலச் செயலாளரும், சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் நடுரோட்டில் வெட்டிக் கொலை; திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரின் பேரன் வெட்டிக் கொலை; சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த காட்டுராஜா மற்றும் அவரது மனைவி காசியம்மாள் எரித்துக் கொலை; நாகப்பட்டினம் மாவட்டம் இருக்கை கிராமத்தைச் சேர்ந்த முபாரக் கழுத்தை அறுத்துக் கொலை; கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு மலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா கடத்திக் கொலை; திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவலைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன் தலை துண்டித்துக் கொலை; திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே மாரியப்பன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், தப்பூர் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் கட்டையால் தாக்கிக் கொலை; விழுப்புரம் மாவட்டம், காரணை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி படுகொலை; சிவகங்கை அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் முத்துபாண்டி வெட்டிக் கொலை; திருவண்ணாமலை மாவட்டம், வீரானந்தல்லை சேர்ந்த வெங்கடேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சீலேப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி வெங்கடப்பன் அரிவாளால் வெட்டிக் கொலை; கடலூர் மாவட்டம், குப்பங்குளத்தைச் சேர்ந்த காந்திமதி வெட்டிக் கொலை; கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டுவைச் சேர்ந்த கோவிந்தராசு மர்ம மரணம்; தேவகோட்டை ஒன்றிய பாஜக பொதுச் செயலாளர் கதிரவன் வெட்டிக் கொலை என எண்ணற்ற கொலைகள் வரிசையில், நேற்று திண்டுக்கல், இ.பி. காலனியைச் சேர்ந்த நிர்மலா பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை
வேலூர் மாநகர் உட்பட்ட தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு சுவற்றை துளையிட்டு சுமார் 15 கிலோ தங்க நகைகள், 500 கிராம் வைர நகைகளை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்து சென்றார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் டீக்கா ராமன் என்ற கொள்ளையனை கைது செய்து நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி, சட்டம்- ஒழுங்கைச் சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கவும், கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவும் அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரைகள் வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.