ஆப்நகரம்

தியேட்டரில் பார்க்கிங் கட்டணம் செலுத்த மறுத்தவர் கொலை

பரணீதரன் கட்டணம் செலுத்த மறுத்து செல்வராஜுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தியேட்டரில் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியரான சேகர் என்பவருடன் சேர்ந்து பரணீதரனைத் தாக்கியுள்ளார்.

Samayam Tamil 11 May 2019, 8:45 am
தியேட்டரில் 10 ரூபாய் பார்க்கிங் கட்டணம் செலுத்த மறத்த நபர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
Samayam Tamil gffg


கர்நாடக மாநிலம் பெங்களூரின் கிழக்குப் பகுதியில் உள்ள பாரதி நகரில் செயின்ட் ஜான்ஸ் சாலையில் லாண்யா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் காஞ்சனா 3 என்ற தமிழ்ப் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்தத் தியேட்டரில் படம் பார்க்க ஆஸ்டின் டவுண் பகுதியைச் சேர்ந்த பரணீதரன் (38) என்பவரும் அவரது உறவினர் ஒருவரும் பைக்கில் வந்துள்ளனர். பரணீதரன் பைக்கை பார்க் செய்ய வந்தபோது தியேட்டரில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் ஊழியர் செல்வராஜ் 10 ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

பரணீதரன் கட்டணம் செலுத்த மறுத்து செல்வராஜுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தியேட்டரில் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியரான சேகர் என்பவருடன் சேர்ந்து பரணீதரனைத் தாக்கியுள்ளார்.

துவண்டுபோன பரணீதரனை இருவரும் தியேட்டருக்குள் தூக்கிச்சென்று மீண்டும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது தியேட்டரில் இருந்த மற்ற ஊழியர்கள் வந்து பரணீதரனை மீட்டு, ஆம்புலென்ஸில் அருகிலிருந்த மருத்தவமனைக்குக் அனுப்பியுள்ளனர்.

மருத்துவமனையில் பரணீதரனை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதுபற்றி அறிந்த பாரதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் மற்றும் சேகரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி