ஆப்நகரம்

சாதிய கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்த விவகாரத்தில் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

அதிமுக அரசு, ஆளுநரின் சிறப்பு அனுமதியைப் பெற்று மாநிலத்தை உலுக்கிய சாதிய கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த 13 கைதிகளை விடுதலை செய்தது...

Samayam Tamil 27 Nov 2019, 5:59 pm
1997ஆம் ஆண்டு, மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 7 பேர் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது 17பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கொடூரமாகக் கொலை செய்தது. இதில் 3 பேரை திமுக ஆட்சியிலிருந்தபோது விடுதலை செய்தது. அப்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
Samayam Tamil 71989224


அதைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் அடிப்படையில், மேலவளவு சாதியக் கொலைக் குற்றவாளிகள் 13 பேருக்கு பொது மன்னிப்பு அளித்து அதிமுக அரசு விடுதலை செய்தது. இதற்கிடையில், இந்த விடுதலைக் குறித்து அதிமுக மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலவளவு கொலை வழக்கு: சர்ச்சையைக் கிளப்பும் 13 பேர் விடுதலை!

இந்த விடுதலை குறித்த தகவல் வெளியான போதே பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த அதிமுக அரசு, ஆளுநரின் சிறப்பு அனுமதியைப் பெற்று இப்போது விடுதலை செய்தது.

தமிழ்நாட்டையே உலுக்கிய கொலைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் வெளியே வந்தது விவாதத்தைக் கிளப்பியது.

இந்நிலையில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அரசாணை நகலை வழங்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது.

கொலை செய்துவிட்டு சிறையில் தண்டனை பெற்று வந்தவர்களை விடுதலை செய்ததற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்த உயர் நீதிமன்ற கிளை, இப்போது அதிரடி உத்தரவுகளைப் பிறபித்துள்ளது. அதன்படி, “அதிமுக அரசால் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வேலூர் மாவட்டத்திலேதான் தங்க வேண்டும். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று நன்னெறி அலுவலர் முன்னிலையில் மாதம் 2 முறை கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தை உலுக்கிய சாதிய கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுதலை செய்த அதிமுக அரசு!

மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு ஆர்ப்பாட்டத்திற்கும் இப்போதைய நேரத்தில் அனுமதி வழங்கிவிடக் கூடாது” என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி