ஆப்நகரம்

பைக்கில் கடத்திய கஞ்சா, சுற்றி வளைத்த போலீஸ் - ராமநாதபுரத்தில் பரபரப்பு!

முதுகுளத்தூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 21 Aug 2020, 1:44 pm
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அங்கு வந்தவர் இடிவிலகி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் மாரி என்கிற மாரீஸ்வரன் என்று தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடத்திய சோதனையில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil Ganja Seized


உடனே அவரைக் கைது செய்த போலீசார் பேரையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாரியிடம் இருந்து ரூ.1,850 ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் மாரியுடன் சேர்ந்து கண்ணார்பட்டியைச் சேர்ந்த குருவி ரமேஷ், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சபரி ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

ரவுடி சுட்டுக் கொலை: அதிகாலை நிகழ்ந்த ‘பகீர்’சம்பவம்!

இவர்கள் கமுதி மற்றும் பேரையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாரி மீது கமுதி, கோவிலாங்குளம், முதுகுளத்தூர், மதுரை உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாரி மட்டும் சிக்கிய நிலையில் மற்ற இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி