ஆப்நகரம்

சேலம்: தீவிரவாதிகளுக்கு ‘சிம்’ விற்பனை: என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 24 Feb 2020, 10:58 am
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை என அழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Samayam Tamil என்ஐஏ அதிகாரிகள் சோதனை!


களியக்காவிளையில் எஸ்ஐ வில்சன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு அபதுல் சமீம், தவுபீக் என்ற இரு பயங்கரவாதிகளால் படு கொலை செய்யப்பட்டார். கொலை செய்தபின் தலைமறைவாகியிருந்த இருவரும் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்துல் சமீம், தவுபீக் இருவரும் பல்வேறு ஊர்களில் உள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களுக்கு சிம் சப்ளை செய்தவர்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னை, சேலம், திருச்செந்தூர், கடலூர், நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று கொச்சியிலிருந்து மூன்று குழுக்களாக என்ஐஏ அதிகாரிகள் சேலம் வந்தனர். அங்கு அம்மாபேட்டை, ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்... மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

இதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றுவருகிறது. சேலம் டவுண் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். தீவிரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களுக்கு அப்துல் ரகுமான் சிம் விற்றதாக புகார் எழுந்துள்ளது. அவர் யார் யாருக்கெல்லாம் சிம் விற்றார் என அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த விசாரணையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் டவுண் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி