ஆப்நகரம்

பைக் திருட முயன்றவரை சண்டையிட்டு பிடித்து, போலீசில் ஒப்படைத்த முதியவர்!

சேலத்தில் பைக் திருட வந்ததாக கூறப்படும் இளைஞரை, முதியவர் ஒருவர் சண்டையிட்டு எதிர்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2019, 4:39 pm
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியில் கார், பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள் திருடு போவதாக குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நேற்று இரவு சந்தேகத்துக்கு இடமான முறையில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பைக் ஒன்றை எடுக்க முயன்றார்.
Samayam Tamil salem bike thief


அப்போது வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், சத்தம் போட்டு அந்த இளைஞரை அழைத்துள்ளார். முதியவரை கண்ட இளைஞர் அவசர அவசரமாக கிளம்ப முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட முதியவர், பாய்ந்து சென்று பைக்கோடு சேர்த்து இளைஞரை கீழே தள்ளினார்.

பின்னர், முதியவரை தாக்கிய வாலிபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அதன்பின்னரும், முழுவீச்சில் எழுந்த முதியவர் வாலிபர் மீது எதிர்தாக்குதல் நடத்தி கையும் களவுமாக பிடித்துவிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

பின்னர், அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை அரிசிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை, வயதான தம்பதியினர் துணிந்து எதிர்கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி