ஆப்நகரம்

அந்த அளவுக்கு எப்படி காயம் ஏற்பட்டிருக்கும்? வாணி ஜெயராம் மரணத்தில் எழும் கேள்வி

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இறப்பு குறித்து போலீசார் கூறுவது என்ன?

Samayam Tamil 4 Feb 2023, 7:22 pm
சென்னை, நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் அருகே உள்ளது ஹேடாச் சாலை முதல் தெரு. இங்கு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 23 ஆண்டுகளாக வசித்து வந்தவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78). இவர் கணவர் ஜெயராம் இறந்துவிட்டதால் தனியாகத்தான் வசித்து வந்தார். இவர்களுக்கு பிள்ளைகளும் இல்லை.
Samayam Tamil vani jayaram
vani jayaram case


இவரது வீட்டில் அதே பகுதியில் உள்ள புஷ்பா நகரை சேர்ந்த மலர்க்கொடி (45) என்று பெண்மணி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மலர்க்கொடி வழக்கம் போல இன்று காலை 11 மணி அளவில் வாணி ஜெயராம் வீட்டிற்கு வந்தார்.

அப்போது, கதவு திறக்கப்படவில்லை. மலர்கொடி பலமுறை கதவு தட்டியும் அவர் திறக்கவில்லை. அவரின் மொபைல் போனிலும் தொடர்பு கொண்டார். அவர் எடுக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது , அங்கு வாணி ஜெயராம் படுக்கையில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். நெற்றியில் ரத்த காயம் இருந்தது.

அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், வாணி ஜெயராம் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, வாணி ஜெயராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின், வயது முதிர்வு காரணமாக படுக்கையில் இருந்து தவறி வாணி ஜெயராம் விழுந்திருக்கலாம், அதனால் கீழே இருந்த கண்ணாடி சில்லில் காயம் பட்டு இறந்தாரா எனவும் இயற்கைக்கு மாறான மரணம் என்றும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மலர்கொடி கூறும்போது; வாணி ஜெயராம் வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். நேற்று வழக்கம் போல், வேலைக்கு வந்தேன் கதவு திறக்கவில்லை. மொபைல் போனில் ஐந்து முறை தொடர்பு கொண்டேன். அவர் எடுக்காததால், உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசுக்கு தகவல் தந்தோம். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாணி ஜெயராம் நெற்றியில் அடிப்பட்டு இறந்து கிடந்தார் என இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி