ஆப்நகரம்

தாம்பரம்: கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

தாம்பரம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Samayam Tamil 26 Sep 2021, 5:15 pm
சென்னை, குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா (20) தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வக பட்டய படிப்பு படித்து வந்துள்ளார். ஸ்வேதா 23.09.2021 அன்று மதியம் தனது தோழி சங்கீதாவுடன் சேர்ந்து கிழக்கு தாம்பரம், இரயில்வே காலனி ரோட்டில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஸ்வேதாவிற்கு ஏற்கனவே அறிமுகமான ராமச்சந்திரன் (எ) ராமு, சுவேதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் ஸ்வேதாவை சரமாரியாக குத்திவிட்டு, தன்னுடைய கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Samayam Tamil swetha murder


சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஸ்வேதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தள்ளனர். மேலும் காயமடைந்த ராமுவை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து கொலையுண்ட ஸ்வேதாவின் தந்தை மதியழகன் S-15 சேலையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

S-15 சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் நாகப்பட்டினம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 செல்போன் கைப்பற்றப்பட்டது.

ஜோதிகாவின் திரை வசனத்தால் சிறுமிக்கு கிடைத்த நீதி..! சென்னை நிஜ சம்பவம்

விசாரணையில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் பொறியியல் படிப்பு முடித்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், ராமச்சந்திரன் மேற்படி சுவேதாவை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுவேதா ராமுவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ராமச்சந்திரன் சம்பவத்தன்று ஸ்வேதாவை செல்போனில் தொடர்பு கொண்டு தனியாக பேசவேண்டும் என கூறி சம்பவயிடத்திற்கு வரவழைத்து தன்னிடம் ஏன் பேச மறுக்கிறாய் என கேட்ட போது, தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், ஸ்வேதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் ஸ்வேதாவின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்வேதாவின் உடலை வாங்க ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் மருத்துவமனைக்கு முன்பு குவிந்தனர். ராமச்சந்திரனுக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் அவரை வேறு வழியாக போலீசார் அழைத்து சென்று சானடோரியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை அக்டோபர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே அனைத்து விதிமுறைகளும் முடிந்து ஸ்வேதாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளின் பிரேதத்தை பார்த்து கதறி அழுத பெற்றோரின் நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அடுத்த செய்தி