ஆப்நகரம்

குடிபோதையில் வம்புக்கு இழுத்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை.! தேனியில் பரபரப்பு..

தேனி அருகே குடிபோதையில் தந்தையிடம் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 7 Oct 2019, 7:24 pm
தேனி மாவட்டம் மஞ்சு நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் . இவர் அப்பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் மலைச்சாமி (27). ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
Samayam Tamil 6


தனியார் டயர் தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் மலைச்சாமி தினமும் மது குடித்து வந்துள்ளார். அனுதினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் இவர் மனைவியுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று குடி போதையில் வீட்டிற்கு வந்த மலைச்சாமி, தந்தை தங்கராஜுடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோழி கடையில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு தந்தையை குத்த முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் தனது மகன் மலைச்சாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மலைச்சாமிக்கு கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். கொலை சம்பவம் அறிந்து வந்த போலீசார் தங்கராஜை கைது செய்து பழனி செட்டிபட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர் .

தந்தையே மகனை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி