ஆப்நகரம்

இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை: பழைய குற்றவாளிகள் 200 பேர் வீடுகளில் போலீசார் சோதனை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 200 பேர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

Samayam Tamil 12 Feb 2023, 3:28 pm
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கூடுதல் பாதுகாப்பு பணிகளில் தமிழ் நாடு சிறப்பு காவல் படையினரும், துணை ராணுவத்தினர், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil erode

அதன்படி, சென்னை ஆவடி, வேலூரில் இருந்து தமிழ் நாடு சிறப்பு காவல் படையினர் 160 பேர் கடந்த 8ம் தேதி ஈரோடு வந்தனர்.

இந்த நிலையில், 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து 2 கம்பெனி துணை ராணுவத்தினர் 184 பேர் ரெயில் மூலமாக நேற்று இரவும் ,இன்று காலையும் ஈரோடு வந்தடைந்தனர். இது தவிர இந்திய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில், இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 200 பேர் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் அமைதியான முறையில் நடத்தி முடிக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றச்செயல்களில் ஈடுபடும் பழங்குற்றவாளிகள் மற்றும் அரசியல் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 200 பழங்குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர்.

அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளதா என 200 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், ஆயுதங்கள் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. அந்த பழங்குற்றவாளிகள் பட்டியலில் உள்ள 10 பேர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 150 பேர் நன்னடத்தை விதிமுறைகளின் படி ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீசார் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இவர்கள் நன்னடத்தையை மீறினால் உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும், மீதமுள்ள 40 பேர் ஈரோடு மாவட்டத்தில் இல்லை என்பதால், அவர்கள் விவரம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி