ஆப்நகரம்

தொல்லை கொடுத்ததால் 3 வயது சிறுவனை அடித்து கொன்ற வாலிபர் கைது.! பொள்ளாச்சியில் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் தொல்லை கொடுத்ததாக தாக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளான்.

Samayam Tamil 7 Oct 2019, 1:51 pm
காஞ்சிபுரம் மாவட்டம் நிலவை பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (26). இவர் 6 வருடங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் (22) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு முத்தழகு (5) என்ற மகளும், மதியழகன் (3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர்.
Samayam Tamil 2


கணவனை விட்டு பிரிந்த பேச்சியம்மாள் இரு குழந்தைகளுடன் கோயம்புத்தூருக்கு குடியேறி உள்ளார். அப்போது பேச்சியம்மாளுடன் அவரது மாமா மகன் பிரகாஷ் (19) என்பவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்குள் நெருக்கம் ஏற்பட்டு கணவன் மனைவி போல் இருந்துள்ளனர். பேச்சியம்மாளின் மகன் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்ததால் அங்கு வசிக்கும் அக்கம் பக்கத்தினருக்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வீட்டு உரிமையாளர் வீட்டை உடனே காலி செய்யும்படி கூறியுள்ளார்.

இதனால் பேச்சியம்மாள் தனது பிள்ளைகள் மற்றும் பிரகாஷ் உடன் பொள்ளாச்சியில் உள்ள நல்லூரில் இருக்கும் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பேச்சியம்மாள் கடந்த சனிக்கிழமை காலை 9 மணி அளவில் வீட்டிற்கு அருகே தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்து தனது மகனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள், வீட்டிற்குள் வந்து பார்த்த போது மகன் மதியழகன், படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளான். உடனே அவனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், சிறுவன் அடங்காமல் தொல்லை கொடுத்து வந்ததால், வீட்டிலிருந்த பிரகாஷ் கோவத்தில் அடித்து தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர் மீது போலீசார் பிரிவு 304 இன் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி