ஆப்நகரம்

மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டல்... மொபைல் ஆப் மூலம் மன உளைச்சலுக்கு ஆளான பெண்

விழுப்புரத்தில் மொபைல் ஆப் மூலம் கடன் வாங்கிய பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டல்:- பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Samayam Tamil 30 Jun 2022, 7:37 pm
விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபைல் ஆப் மூலம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை தவணை முறையில் முழுமையாக செலுத்திவிட்ட போதிலும், மேலும் கடன் தொகையை செலுத்த வேண்டும் என கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் நித்யாவை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.
Samayam Tamil fraud loan app


இதனால் வேறு வழியின்றி ரூ.3 லட்சம் வரை மொபைல் ஆப் நிறுவனத்திற்கு செலுத்திவிட்ட போதிலும் மேலும், மேலும் கடன் தொகையை செலுத்த வேண்டும் என கேட்டு நித்யாவிற்கு மிரட்டல் வந்துள்ளது. இந்நிலையில் கேட்ட தொகையை கொடுக்காததால் நித்யாவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரின் மொபைல் போனில் இருந்த அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளத்தோடு, சமூக வலைத்தளங்களிலும் கடன் கொடுத்த மொபைல் ஆப் நிறுவனம் பதிவிட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நித்யா, இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து விழுப்புரம் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

''மொபைல் ஆப் மூலம் பெற்ற சிறு கடன் தொகைக்காக பல லட்சம் ரூபாயை இழந்து, தற்போது மானத்தையும் இழந்து கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்'' என பாதிக்கப்பட்ட பெண் நித்யா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி